என்ன தவம் செய்தேன் நான்!




அரிது அரிது மானிடனாய் பிறத்தல் அரிது !
அதனினும் அரிது என் பெற்றோர்களுக்கு 
மகனாய் பிறக்கும் வரத்தைப் பெற்றல் அரிது!

எதிலிருந்து துவங்குவது என்றுத் தெரியவில்லை!
முக்கியமான எதையும் விட்டுவிடக் கூடும் 
பாவம் செய்யும் துணிச்சலும் எனக்கு இல்லை!
பதிவுகள் பலவும் பலகாலம் நான் எழுதி வந்தாலும் 
இப்பதிவு எழுதும் அவசியம் 
இப்பொழுது வந்தாகி விட்டதா எனவும் விளங்கவில்லை!
இருப்பினும் இனியும் எழுதாது தாமத்திதால் 
என் பிறப்பின் நோக்கம் நிறைவேறும் என்று எனக்குத் தோணவில்லை!
ஆதலால் துளியும் தள்ளிபோடாது எழுதக் கடவுவது 
என எனக்கே ஒரு கட்டுப்பாடை வரைந்துக் கொண்டுத் துவங்குகிறேன்!

வருடம் 1970!
அந்த இளைஞனுக்கு வயது இருபத்தியொன்பது!
அந்த யுவதிக்கோ இருபத்தியொன்று இருந்திருக்கலாம்!
சொந்தமே ஆனாலும் காதல் செய்வது எனக் கருதி 
முறைப் பெண்ணிற்கு "கள்ளோ காவியமோ " பரிசளிக்கின்றான்!
காதலியின் கன்னத்தில் வெட்கச் சிவப்பு மறையும் முன் 
திருமணம் குறித்து இரு மனங்களும் 
மௌனங்களால் பரிபாலனைச் செய்துகொள்ள 
அவனது தமக்கையின் கணவனின் தலைமையில் 
ஒரு இந்துத் திருமணம் கிறுத்துவ பாதிரியாரின் ஆசிர்வாதத்தோடு 
இனிதே முடிவுறுகிறது திண்டுக்கல்லில்!

கூட்டுக் குடும்பத்தில் துவங்கிய 
அவர்களது பயணம் மெல்ல மெல்ல தனிக்குடித்தனமானாலும் 
அவ்விளைஞனின் வேலை பொருட்டு 
மாற்றல்கள் ஏராளம் வரத் தொடர 
அவ்வுயதியின் இல்லற வாழ்க்கை 
தமிழ்நாட்டின் அநேகப் பட்டணங்களைச் 
சுற்றிச் சுற்றி வந்தாலும் 
அந்தக் காதல் பரிசுத்தமானதால் 
நான்குக் குழந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக 
அவர்களிடம் தவழத்தான் செய்தன!

முதல் குழந்தைக்கு கவிஞன்  பாரதியின் பிறந்தநாளினை ஒட்டி 
பிறந்ததனால் சோம சுந்தர பாரதி என நாமாகரணம் சூடப்படுகிறது!
இர்ண்டாவதாக பிருந்தா எனும் அழகிய பெண் குழந்தை!
முதல் வருடம் கடந்ததும் காலனின் கணக்கு வேறாக இருக்க 
பிருந்தா நீங்காத் துயரம் தந்து விட்டு போய்விடுகிறாள்!
அதனைத் தொடர்ந்து மணிகண்டனும், மகாலக்ஷ்மியும் 
என அந்தக் குடும்பம் ஒருவழியாக ஐவர் எனப் 
பயணிக்கத் துவங்குகிறது!

குருவிக் கூடென குஞ்சுகளைக் கவ்விக் கொண்டு 
தலைவனும் தலைவியும் கைகளில் 
ரெண்டுத் தகரப் பெட்டிகளுடனும் 
மனதில் பரந்த வாஞ்சைகளுடனும் 
ஊர் ஊராகச் சுற்றி வருகின்றனர்!
குடிசை வீடும் தகரக் கொட்டகைகளுமே நிரந்தரமாகிப் போனாலும் 
அக்குடும்பத்தில் எல்லையிலா ஆனந்தம் மட்டும் 
என்றென்றும் நிதர்சனமாய் தங்கி விடுகிறது!

நகராட்சிப் பொறியாளர் எனும் பதவியில் 
நேர்மைத் தவறா கொள்கைகள் பால் கொண்டிருந்தப் பிடிப்பால்
"தன் கடன் பணி செய்து கிடப்பதே" என 
அவனோ  கடமையில் மூழ்கி கிடக்க,
அவனது மனைவியோ 
தன் கணவன் மற்றும் குழந்தைகள் தான் உலகம் என்று 
அவர்களையேச் சுற்றி சுற்றி வர,
அவ்விருவரும் தங்கள் வாழ்வாதாரத்தின் பகட்டைப்  பற்றியெல்லாம் 
கவலைப்பட்டதாகவேத் தெரியவில்லை!

குழந்தைகள் படிப்பு ஒன்று மட்டுமே 
அவ்விருவருக்கும் பிரதானமாக இருந்து வந்திருக்க வேண்டும்!
அதன் பரிசாக குழந்தைகள் மூவரும் 
குறிப்பாக பாரதியோ தன் தந்தையின் எல்லாக் கனவுகளையும் 
ஒட்டு மொத்தமாக நிறைவேற்றி வர,
அதற்காக அவர்கள் செய்த தியாகங்கள் 
பட்டியலுக்கு அப்பாற்ப்பட்டது!
சொந்தமாய் ஒரு தொலைகாட்சிப் பெட்டியும்
இதர பல அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருள்கள் 
வாங்குவதற்கு அவர்களுக்கு இருபத்தி நான்கு வருடங்கள் 
தேவைப்பட்டிருக்கிறது என்றால் 
அந்தத் தியாகத்தின் வலி புரியும்!
இப்படியிருக்க சொந்தமாய் வீட்டிற்கு எங்கு போவது?

மூத்த மைந்தன் முதன் முதலாய் 
பணி நிமித்தமாய் வெளி மாநிலம் செல்லவேண்டிய சூழலில் 
அந்தக் குடும்பத்தில் முதல் பிரிவு புயலாய் வீசத் துவங்கிற்று !
குருவிக் கூட்டிலிருந்து முதன் முதலாய் சேய்குருவி 
பறந்துச் செல்ல, சந்தோசப் படவேண்டிய குடும்பம் 
துக்கம் தொண்டையை அடைக்க 
வருடம் இரெண்டை இரு யுகங்களாய் கடந்துச்  சென்றது!

1995 ஆம் ஆண்டு!
இரெண்டாம் மகன் மணிகண்டன் 
திருச்சியில் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு சென்னை வர
"எல் அண்ட் டி" யில் பணிபுரியும் மூத்த மகன் 
தாயையும் தமையனையும் கூட வைத்துக் கொண்டு 
சென்னையில் போரூரில் ஸ்ரீராம் நகரில் 
"அபிராமி குடியிருப்பில்" வாழ,
ஊரிலோ கடைக்குட்டி லக்ஷ்மி 
பொறியியல் படிப்புக்காக ஈரோடு கல்லூரியில் சேர்ந்திட,
குடும்பத் தலைவன் திருச்சியில் 
குடிநீர் வடிகால் பணியில் தொடர்ந்திட என 
அக்குடும்பம் மூன்று திசைகளில் பயணிக்கிறது!

1997 ஆம் ஆண்டு!
மூத்த மகனுக்குத் திருமணம் !
அதனைத் தொடர்ந்து அடுத்த பதினைந்து மாதங்களில் 
நடந்தேறிய சம்பவங்கள் 
கல் இருதயம் கொண்டோரையும் 
அறுத்துப் போடும் படியாகக் கடந்துச் செல்கிறது!
நெருப்பையும் சுட்டெரிக்கும் சக்தி கொண்ட
நேர்மையையும் தன்மானத்தையும் தன்னகத்தே கொண்டிருந்த 
அக்குடும்பம் அக்னிகடவுளின்  கோரத் தாண்டவ 
ஆட்டத்தில் உருக்குலைந்து போக 
அதற்கு விலையாக அவர்கள் பலி கொடுத்தது 
தன் மூத்த மைந்தனையும் மருமகளையும்!
படிப்பதற்கே ரணமாயிருக்கும் பொழுது 
அதனை அனுபவித்தவர்களின் வேதனையினை 
வெறும் வார்த்தைகளால் விவரிக்க இயலுமோ?

"இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது?" என்றெல்லாம் 
எண்ணிப் பார்த்து கால விரயம் செய்யக்கூட நேரம் இல்லாது  
அந்த இருவரும் எஞ்சிய இரு குழந்தைகளைக் 
கரை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் 
மீண்டும் ஓடத் துவங்க
காலச் சக்கரம் மறுபடியும் ஒரு சுற்று 
வர ஆயத்தமாகிறது!

மகள் கல்லூரி முடிக்கிறாள்!
அண்ணனின் ஆசைப் படி 
நல்லதொரு மென்பொருள் நிறுவனத்தில் 
தன்னை பணியமர்த்திக் கொள்கிறாள்!
நிறுவனம் அவளை "கனடா" அனுப்புகிறது!
பெங்களூரில் சொந்தமாய் வீடு வாங்க முடிகிறது!
மீதமுள்ள ஒரே ஒரு மகன் 
அண்ணன் சேர்த்து விட்ட படிப்பில் 
அகில இந்திய தேர்வில் இரெண்டாம் இடம் வருகிறான்!
சென்னையில் அதே நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறுகிறான்!
மகன்  "இருந்து இறந்த" வீட்டையும் 
அவர்கள் வாங்கும் சூழல் வருகிறது!
குடிசைகளில் வாழ்ந்து வந்த அக்குடும்பம் 
வெளியே வந்து வானத்தை அன்னாந்து பார்க்க 
காலம் கட்டாயப் படுத்துகிறது!
கண்களில் நீர் பனிக்க "இதுவும் கடந்து போகும்" என 
ஒன்றுக்கு இரண்டு வீடுகளைச் சொந்தமாக்கிக் கொள்ளும் 
நிலையையும் தாங்கி கொள்கிறது!

மகளும் மகனும் புதிய சொந்தங்களை 
திருமணங்கள் வாயிலாகக் கொணர 
அக்குடும்பத்தில் பேரப் பிள்ளைகள் 
அகிலனும் அறிவும் பிறக்கிறார்கள்!
சென்னையிலும் பெங்களூருவிலும் 
சொந்த வீடுகள் ஒன்றுக்கு இரண்டு இருந்தாலும் 
இதை தவிர்த்து குளித்தலையிலும் 
மேலும் ஒரு வீட்டை கொண்டிருந்தாலும் 
எல்லோரையும் போல தனித்திருக்க 
மனம் ஒப்பாத நிலையில் 
அவ்விருவரும் மகன் மற்றும் மகள் வீடுகளில் 
மாறி மாறி நாடோடிகள் போல 
வாழ முற்படுகிறார்கள்!
சொக்கத் தங்கமாம் மருமகனின் பெரிய மனது 
அவர்களிருவரையும் பிரதானமாக மகள் வீட்டில் 
இருக்கும் படிச் செய்கிறது!

இளைய மகன் தட்டுத் தடுமாறி 
கொஞ்சம் கொஞ்சமாகக் காலூன்றி நிற்க முற்பட,
காலம் அவனுக்கும் சொந்தமாக 
இரண்டு வீடுகளை வாங்கித் தருகிறது!
மனதுக்குள் பூரித்துப் போனாலும் 
அதனை முழுமையாக வெளிகொணராமல் 
சொந்தமாகத் தொழில் நடத்தும் மகன் 
எங்கே வரும் காலத்தில் இடறி விடுவானோ 
எனும் ஐயம் மேலூன்றி நிற்க 
தங்களுக்கு என்று எதையும் வைத்துக் கொள்ளாமல் 
தமக்கென்று இருந்த சொந்த வீடுகளில் ஒன்றை 
விற்க முற்படும் துணிவு 
என் பெற்றோர்களைத் தவிர 
இந்த உலகத்தில் வேறு யாருக்காவது வருமா?
நான் அறைகூவல் இடுகிறேன்!

மூத்த மகனின் இழப்பு அவ்விருவரையும் 
நிரந்தர சொல்லெனாத் துயரத்தில் ஆட்படுத்தியிருந்தாலும் 
அதனை தங்களிடத்திலேயே புதைத்துக் கொண்டு 
வாழ்ந்து கொண்டிருக்கும் என் பெற்றோர்கள்,
சுயநலத்திற்கே சுயநலம் வந்தாலும் வரலாம் ஆனாலும் 
தங்கள் சுயநலம் பாராது தம் மக்கட்த் துயரைப் போக்க 
வெறும் உயிரை மட்டும் வைத்துக் கொண்டிருக்கும் நிலைதனைப் 
பார்க்கும் போது எண்ணிப் பார்க்கிறேன்!
அரிது அரிது மானிடனாய் பிறத்தல் அரிது !
அதனினும் அரிது என் பெற்றோர்களுக்கு 
மகனாய் பிறக்கும் வரத்தைப் பெற்றல் அரிது!


அவர்களுக்கு என்ன கைம்மாறு நான் செய்யப் போகிறேன்!
பகவத் கீதை கேட்கிறது:
"எதைக் கொண்டு வந்தோம், எதைக் கொண்டு செல்ல?" என்று !
ரத்தமும் சதையும் பிண்டமுமாக என்னை
இந்த உலகத்தில் கொண்டு வந்து சேர்த்த 
அந்த தியாக உள்ளங்களுக்கு என்னத் தரப் போகிறேன்?
அவர்களுக்காக "என்னையேத் தருதல்" ஒன்றைத் தவிர 
வேறெதனையும் தந்தாலும் ஈடாகுமா?

என்னைப் போன்றோர்கள் 
"ஏதோ பிறந்தோம், ஏதோ வளர்ந்தோம், ஏதோ வாழ்ந்தோம்"
என்றே எண்ணி எண்ணிமானுடச் சுகங்களையும் 
உயிரற்ற ஜடங்கள்பால் கொண்ட சுகங்களையும் 
அனுபவிப்பதுதான் பிறப்பின் நோக்கம் 
என்று அறியாமை இருளில் மூழ்கி இருப்பது போல் நானும் இல்லாது
என் குடும்பத்தை என்னை விட அவர்களால் நன்றாக பார்த்துக் கொள்ள
என் பெற்றோர்களால் மட்டுமே முடியும் 
என்பதனை முழுமையாக அறியப் பெற்றவனாய்,
என் ஆயுளையும் அவர்களுக்குச் சேர்த்துக் கொடுக்க வேண்டி 
இந்த கணம் மரித்துப் போகும் வரம் கிடைக்க 
ஏங்கியவனாய் அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன்!

"அம்மா, அப்பா, தங்களுக்கு மகனாகப் பெற 
என்ன தவம் செய்தேன் நான்?"






















































































Comments

  1. மனதைப் பிசையும் சுயசரிதை.
    தன்னலமே அறியாத உங்கள் பெற்றோருக்கு ஆயிரங்கோடி நமஸ்காரம்.
    ஆனால் அவர்களுக்கு நீங்கள் தரும் கைம்மாறு சரிதானா?
    நீண்ட ஆயுளோடு அவர்கள் வாழ்ந்து உங்கள் அனைவரையும் வாழ்விக்க வேண்டும். அதற்காக, ஏற்கெனெவே புத்திர சோகத்தில் ஆழ்ந்துள்ள அவர்களுக்கு இன்னுமொரு அப்படிப்பட்ட சோகத்தைக் கொடுத்துத்தான் அவர்களுக்கு நீண்ட ஆயுள் வர வேண்டுமா?
    அது நியாயமா?
    மாறாக, எல்லாவற்றையும் கொடுத்து விட்டு உங்கள் நிழலில் இளைப்பாறும் அவர்களை உங்கள் புத்திரனாக வரியுங்கள்.
    அந்த வகையிலும் அவர்கள் அதிக ஆயுளை உடையவர்கள் ஆகிறார்கள்.

    -ஜெயஸ்ரீ சாரநாதன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை பணிவன்புடன் ஏற்றுக் கொள்கிறேன். நன்றி

      Delete
  2. Very excellent sir. No words to express.i was emotionally moved.my namaskaram
    s to ur parents.

    ReplyDelete
  3. Very excellent sir. No words to express.i was emotionally moved.my namaskaram
    s to ur parents.

    ReplyDelete
  4. Very excellent sir. No words to express.i was emotionally moved.my namaskaram
    s to ur parents.

    ReplyDelete
  5. Very excellent sir. No words to express.i was emotionally moved.my namaskaram
    s to ur parents.

    ReplyDelete
  6. படித்தேன். நெகிழ்ந்தேன். அன்னையும் பிதாவும் அன்பின் இருப்பிடம்.

    .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

கட்டுமரம்

வயசாயிடுச்சில்ல...!