சென்னை முதல் தனுஷ்கோடி வரை....!

சென்னை முதல் தனுஷ்கோடி வரை....!













இந்த வருடத்தின் துவக்கம்
கண்டிப்பாக ஒரு வித்தியாசத் துவக்கமாகவிருக்கவேண்டுமென விரும்பி,
எனது நீண்ட நாள் பிரார்த்தனையாகிய
பழநி பாதயாத்திரைதனை
ஆண்டின் முதல் நாள் பழநியில் காலடி படும்படி
சென்ற ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதிதனில்
எனது யாத்திரைதனை துவக்கினேன் !
விரும்பியபடி 01.01.2014 அதிகாலை 3.00 மணியளவில் பழனி சென்று அடைந்தேன்!
பால தண்டாயுதபாணியை தரிசனம் செய்தேன்!

அதனைத் தொடர்ந்து
நகரத்தார் கோவில்கள் ஆகிய
பிள்ளையார்பட்டி, அரியக்குடி, குன்றக்குடி திருத்தலங்களுக்கும்,
செட்டிநாடு நகரங்களாகிய
காரைக்குடி மற்றும் தேவகோட்டைக்கும் விஜயம் செய்து,
இறுதியாக இராமநாதபுரம், மண்டபம், இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி
ஆகிய ஊர்களுக்கும் சென்று வந்தேன்!

ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு ஞாபகம்!
பலப் பல அனுபவம்!
நகரத்தாரின் கட்டிட கலை நுணுக்கங்கள் என்ன;
இராமேஸ்வர பாலத்தின் பிரமிப்பு என்ன;
தனுஷ்கோடி கிராமத்தின் ஆறா வடுக்கள் என்ன என்ன...!

காரைக்குடியில் நான் படித்த பள்ளியை பார்த்த போது
ஒரு இனம் புரியா ஈரம் கண்களில் பனித்தது !
நாங்கள் வாழ்ந்த வீட்டின் முகப்பில் நின்ற போது
நாற்பது ஆண்டுகள் முந்தய என் சேட்டைகளும் அம்மாவின் கத்தல்களும்
சத்தமாய் ஒலித்தது!
அண்ணன் பாரதியின் பள்ளித் தோழன் சரவணனின்
இன்றைய நிலைமையை அறியும் பொழுது
நெஞ்சில் எங்கோ வலித்தது!

வாழ்க்கை ஓடிக் கொண்டே தான் இருக்கிறது!
ஆனால், என்றும் நீங்கா நினைவுகளாய் பயணங்கள் கடந்து கொண்டே தான் இருக்கின்றன!
இருப்பவன் இல்லாது போவதும்
இல்லாதவன் உச்சத்துக்கு வருவதும்
காலம் நமக்கு கத்துக் கொடுத்துக் கொண்டே இருக்கும் பாடங்களே!

எதற்காக அழுவது?  எதற்காக சிரிப்பது?
என்றெல்லாம் காலம் நம்மிடையே கேள்விகள் கேட்பதில்லை!
அது கடந்தது கடந்தது தான்!

வாருங்கள் ஓடுவோம்!
இந்தப் பயணம் முடியும் மட்டும்!

1964-இல் அன்றொரு நாள் தனுஷ்கோடியில்
பசிக்கு அழுதிருந்த குழந்தைக்கு தெரிந்திருக்கவா போகிறது???
தன்னையும், தன் தாயையும், இன்னும் 1200 மனிதர்களையும்,
ஒரு ஆழிப் பேரலை விழுங்கிக் கொள்ளப் போகிறது என்று??

இந்த பதிவு, மாண்டு போன
என் தனுஷ்கோடி தொப்புள் கொடியல்லா உறவுகளுக்கு சமர்ப்பணம் !
 

Comments

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!

கட்டுமரம்