என் பார்வையில் " கடல்"

                                                       




சமீபத்தில் வெளியான கடல் திரைப்படம் பற்றிய பல தரப்பு விமர்சனங்களைப் படித்து மனம் கலங்கி, என் ஆதர்ச நெறியாளுனர் திரு. மணிரத்தினம் அவர்களது ஆத்மார்த்த ரசிகனாய் எனது கருத்துக்களை பதிவு செய்வது கடமையென உணர்கிறேன்.

கடல் . . . . !  சமுத்திரம் எவ்வளவு ஆழமும், கொந்தளிப்பும், சீற்றமும், அழகும் மற்றும் அமைதியும் கொண்டதோ அது போலவே இத்திரைப்படமும் என்பதே என் வாதம்.

புனித விவிலியத்தில் சொல்லப்பட்டுள்ள பெரும்பான்மை கருத்துக்களை எனக்குத் தெரிந்து இத்துனை நேர்த்தியாக எவராலும், காட்சி ஊடகத்தில், திறம்பட சொல்லியிருப்பர்களா என்றால் இல்லை என்பதே உண்மை!

சம காலத்துடன் பொருத்தி, கதையின் தன்மைக்கேற்ப பின்புலத்தில், நிஜக் கடலையே ஒரு கதாபாத்திரமாய் உருவாக்கி, அதன் நிற பரிணாமங்களை, தோற்ற இடையூறு இன்றி, சம்பவங்களின் தாக்கங்களுக்காக, பொங்கி எழ வைத்து, ஆர்பரிக்கச் செய்து, காண்போரை, கட்டி போட்டு வைத்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல!

" பாடல்களையெல்லாம் வீணடித்து விட்டார் மணி ரத்தினம்" எனும் குற்றச்சாட்டு, அதனை எழுப்பிய ரசிகனின் ஆதங்க வெளிப்பாடேயன்றி, உண்மை அதுவல்ல! ஒவ்வொரு பாடலும், அதன் மிகச் சரியான தருணங்களில் ஒலிக்கத்தான் செய்கின்றன!

நிர்கதியாய் தெருவில், விடப்பட்ட குழந்தைக்கு, " சித்திரை நிலா"

காதல் வயப்பட்ட வாலிபனின் கனவிற்கு : அடியே"

மயிலிறகாய் காதல் கொண்ட இரு அன்பு உள்ளங்களின் எண்ணங்களை பிரதிபலிக்க " மூங்கில் "தோட்டம்"

மீனவன் தன் வலை வீச்சுக்கு, "ஏலே கீச்சான்"

பேதை மகளின் தூய நேசத்திற்கு " நெஞ்சுக்குள்ள"

கருணைக் கடவுள், உலக மீட்பர், இயேசு கிறிஸ்துவுக்கு, : அன்பின் வாசலே"

கோபம் முறுக்கேறிய இளைஞனின் அடி நாதமாய், " மகுடி மகுடி"

இப்படி ஒவ்வொன்றும், ஒவ்வொரு வகையினில் முக்கியத்துவம் வாய்ந்ததுவே ! அதை விடுத்து, நாயகன் மற்றும் நாயகிக்கு, டூயட் இல்லையே என, வருத்தப்பட்டால், அதற்கு அவரவர் ரசிப்புத் தன்மையில் பஞ்சம் நிலவுகிறது என அர்த்தமாகிறது!

நியாயத்தை நிலை நிறுத்த, அர்விந்த் சுவாமியையும்,
அதர்மத்தை நிலை நிறுத்த, அர்ஜுனையும்,
இவ்விரண்டிற்கும் இடையில், அவஸ்தைப்பட, கெளதம் கார்த்திக்கையும்,
மனம் முற்றும் வளர்ச்சி பெறாத, இளங்கன்னி வேடத்திற்கு துளசியையும்,
நடிக்க வைக்காமால், அப் பாத்திரங்களாய் கனமான கதையின் ஊடே நடமாட
விட்டதில், கண்டிப்பாக இயக்குனரின் உழைப்பு கண்கூடாய்த் தெரியும்!

எழுத்தாளர் ஜெய மோகனின் நாவல்களில் ஒன்றை, நண்பர் மணி ரத்தினம் அவர்கள் எடுத்து, படமாக முற்பட்டிருப்பது நிச்சயம் பாராட்டளுக்கு உரியது!
" இப்படித்தான் இருக்கும் படம்" என எதிர்பார்த்து செல்லாதிர்கள்!

மணிரத்தினத்தின் ஆளுமைக்கு மரியாதை கொடுத்து சென்றால், நிச்சயம் உங்களுக்கு ஒரு பெரிய ஆச்சர்யம் காத்துக்கொண்டிருக்கிறது!

கடல் - வெகு ஜன சமுத்திரம்!

பிரியங்களுடன்,
மணிகண்டன் பா












 

Comments

Popular posts from this blog

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

வயசாயிடுச்சில்ல...!

கட்டுமரம்