நீங்குமோ காரை மாநகரின் நினைவுகள்!
அப்போது எனக்கு ஆறு அல்லது ஏழு வயது இருக்கும். நாங்கள் எல்லாம் காரைக்குடியில் வசித்து வந்தோம். அப்பா நகராட்சிப் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். நகரத்தார் வாழும் ஊரென்பதால் திரும்பிய பக்கமெல்லாம் செட்டியார் வீடுகள், அரண்மனைகள் போல் கம்பீரமாய் வீதி எங்குமிருக்கும். எங்கள் வீடும் அப்படிப்பட்ட இரு அரண்மனைகளுக்கு இடையே, ஒரு மினி பங்களா போல இருந்ததாக ஞாபகம். கொப்புடையம்மன் கோவில், குஞ்சு கிருஷ்ணன் பிள்ளை வீடு, நடராஜா தியேட்டர், மேலவூரணி, LFRC school என சொல்லிக் கொண்டே போகலாம். அப்பா ஒரு பச்சைக் கலர் லாம்ப்ரடா ஸ்கூட்டர் வைத்திருந்தார். எங்கள் நாலு பேரையும் எப்போவாவது ஒரு முறை அதில் உக்கார வைத்துக் கொண்டு, சினிமாவுக்கு கூட்டிப் போவார். அப்படியொரு முறை நாங்கள் எல்லோரும் அதில் பயணித்தபோது, அம்மா சேலை சக்கரத்தில் மாட்டி கீழே விழுந்து கைகளில் சிராய்ப்பு, ரத்தம் வழிய வழிய, என்னுடைய சினிமா கனவு தகர்ந்து போனது. நான் இரவு முழுதும் அழுது கொண்டிருந்தது இன்னும் நினைவில் பசுமையாய்... எங்கள் அடுத்த வீட்டில் எப்போதும் ஒரு கொலுசுச் சத்தமும், கலகலவென சிரிப்பொலியும், மல்லிகை வாசமுமென கவிதையாய் ஒரு சூழல் நிலவ...