அம்பாசமு(ரி)த்திரம்!
சொர்க்கம் எங்கே என்று தேடி செல்வது, அம்பாசமுத்திரம் செல்லாதவர்கள் செய்யும் வேலை! நெல்லை மாவட்டத்தில் ஊர்ப்பெண்டுகள் "அம்பை" என்று செல்லமாக சொல்லக்கேட்கையில், வரும் சுகமே ஒரு அலாதி! வானுயர்ந்த சோலைகளும், தாமிரபரணி ஆற்றின் சலசலப்பும், ஆங்கிலேயர்களின் அழகிய இரும்புப் பாலங்களும், இயற்கையின் எழில் கொஞ்சும் இயல்புடன், எங்கு திரும்பினாலும் பச்சை பசேலென, கம்பளம் விரித்தாற்போல் வயல்வெளிகளும், மரங்களின் அடர்த்தியும், சொரிமுத்தையன் கோவிலும், வீ கே புரமும், அகஸ்தியர் அருவியும், பாபநாசம் சிவன் சன்னதியும், இன்னும் சிலவும், விட்டுபோனப் பலவும், மனதில் அழியாமல் ஒட்டிகொண்டுவிடக்கூடிய விஷயங்கள்! நகரத்து அவசரங்கள் புளித்து போகும் போது, நாகரிகத் தேடல்கள் முடிவிலிகளாய் மாறும் போது, நம் சந்ததிகள் சுபிக்ஷம் பெற, கடவுளின் அநுக்ரஹம் கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை! அம்பாசமுத்திரம் சென்று வாருங்கள்! அது ஒரு இயற்கையின் அக்ஷயபாத்திரம்!